search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெயில்"

    • உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
    • கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர்.

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் உச்சத்தை தொடும் நிலையில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பயப்பட வேண்டியதில்லை. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வெப்ப அலையில் இருந்து எளிதாக தப்பலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் எத்தனை பேரால் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்க முடியும்? அவரச வேலை, சொந்த வேலை, அலுவலக வேலை, தொழில் நிமித்தம் என ஏதாவது ஒரு காரணத்துக்காக பலர் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்வியும் அவர்களின் மனதிற்குள் எழாமல் இல்லை.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வழக்கமாக வெயில் உச்சம் தொடும். ஒவ்வொரு ஆண்டும் மே 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். ஆனால் அதற்கு முன்பே வெப்ப அலை தாக்கும் என்ற எச்சரிக்கையானது, பொதுமக்களை அச்சப்படத்தான் வைக்கிறது.

    வெப்ப அலை என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ஒரு மாநிலத்தில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது வெப்பநிலை 113 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் பதிவாகி 2 நகரங்களில் வழக்கத்தை விட 8 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தாலும் வெப்ப அலை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    மேலும் சமவெளிப் பகுதியில், குறைந்தது 2 நாட்களுக்கு 104 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது 'வெப்ப அலை' நிகழ்வு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலைகளால் தமிழகம் பல்வேறு காலகட்டங்களில் பலவித பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தான் வெப்ப அலை கடுமையாக தாக்கியது.

    வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும்போதும், தீவிரமடையும்போதும் கூடவே வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பெய்வது குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து நிலம் விரைவில் வறண்டு போகும். இதனால் நிலம் வேகமாக வெப்பமடைந்து காற்றை சூடாக மாற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    இதுபோன்ற வெப்ப அலை காலகட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், உடல் நலக்குறைபாடு கொண்ட நோயாளிகள் ஆகியோரே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெப்ப அலையின்போது கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா கண்டம் முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. வெப்ப அலையின்போது நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் பூஞ்சை தொற்றுகள், சொறி, படர் தாமரை போன்ற தோல் நோய்கள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தை பராமரித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    கோடை காலங்களில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு நீர் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நமக்கு கிடைக்கும் நீர் மாசடைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகக் கல் வரும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

    அதே நேரத்தில் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முதலில் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துகளுடன் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் முதல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வெயிலில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு பருத்தி துணியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும். தினமும் 2 முறை அவர்களை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பகல் நேரத்தில், குறிப்பாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வெயிலுக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்பு சத்தும் உடலில் குறையும். இதனை தவிர்க்க பேரீச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். பேரீச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். பேரீச்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை லஸ்சியாகவும் செய்து சாப்பிடலாம். புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். புதினா சாறு குடிப்பது கோடையில் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.

    தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அதில் குளிர்ச்சி தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    மேலும் எலுமிச்சையில் வைட்டமின் 'சி' உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். வியர்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்க எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கொடுக்கலாம். 

    தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் சாப்பிடலாம். பெரும்பாலும் ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    முதியவர்கள் பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்லும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

     

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் என்பதற்காக பலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரசவத்தின் போது பிரச்சனை உருவாகி குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்கு தேவையான அளவு நீர் இருக்க வேண்டும் என்பதால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வெப்ப அலையின்போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீர் தெளித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.

    மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.

    இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது.
    • ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு பிறகும் நீடிக்கிறது. ஆனால் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் மதிய நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 109 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. மேலும் இந்திய அளவில் வெப்பநிலை பதிவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் மிகவும் அதிகளவில் வாட்டி வதைக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வெயில் காரணமாக வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் சென்று வருகின்றனர்.


    ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாத்துக்குடி, மொலாம் பழம், தர்பூசணி ஆகிய பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோடுகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் ஈரோட்டில் பல பகுதிகளில் கடை மற்றும் வீடுகள் முன்பு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் அதிகபடியான வெயில் வாட்டி வருவதால் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடை வீதி பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல்கள் அமைத்துள்ளனர். மேலும் ஈரோடு திருவேங்கடம் வீதியில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மற்றும் பல அரசு அலுவகங்களிலும் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறார்கள்.

    மேலும் ஈரோட்டில் மூலப்பட்டறை வ.உ.சி.பார்க் ரோடு, கருங்கல்பாளையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முன்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடை வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கேன் வைத்து உள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கு கேன்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல்முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

    ஈர்ப்பதம்:

    26.04.2024 முதல் 30.04.2024 : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

    வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

    26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
    • வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 ஆகவே இருந்தது. தற்போது ரூ.80 -ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இடங்களுக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரோட்டோர இளநீர் வியாபாரிகளுக்கு வாரத்துக்கு 200 இளநீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது.

    இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம் என்று இளநீர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சிறிய ரக இளநீர் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் விலை முன்பு ரூ.35 ஆக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இளநீரின் திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
    • ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.

    புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.

    மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
    • தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரியின் பிரதான கிழக்கு கரையின் நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்களாகும். மொத்த நீர்மட்டம் 47.50 அடியாக இருந்தாலும் தரை மட்டம் 31.90 அடியில் இருந்தே நீரை சேமித்து வைக்க முடியும். அதாவது 15.60 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 1.465 டி.எம்.சி. நீரை தேக்கலாம்.

    கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49 ஆயிரத்து 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.

    இங்கிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி 48 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரினால் கூடுதலாக 509 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் எனவும், ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே சமயம் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் சிறுவர்கள் அதை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டனர்.

    அங்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. இது கடும் வறட்சியால் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியின் பரிதாப நிலையை காட்டுகிறது.

    • தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
    • மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வருகின்றன.

    இதுபோக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, கீரை வகைகள், பழங்கள் வருகிறது. அந்த வகையில், தினமும் 700-க்கும் மேற்பட்ட லாரிகளில் 7 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

    எனவே, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் பழங்களின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் 850 பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

    கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பழங்களின் விலை அதிகரித்து வருகின்றது. பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் தேவை காரணமாக பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களின் விலை ரூ.25 வரையிலும், திராட்சை, அன்னாசி, கிர்ணி போன்ற பழங்களின் விலை ரூ.10-ம் உயர்ந்துள்ளது. தர்பூசணி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

    அதேநேரம், மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.260 வரை விற்பனையான மாதுளை தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியிருப்பதால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையான மாம்பழம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் மாம்பழம் விலை குறையவே வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

    பழனி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×